கொளத்தூரில் 84 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை: முதல்வர் வழங்கினார்

கொளத்தூர் இராஜா தோட்டம் திட்டப்பகுதியில், மறுகுடியமர்வு செய்யப்படவுள்ள 84 குடியிருப்புதாரர்களுக்கு ரூ. 20.16 லட்சம் கருணைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 
கொளத்தூரில் 84 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை: முதல்வர் வழங்கினார்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர், இராஜா தோட்டம் திட்டப்பகுதியில், மறுகுடியமர்வு செய்யப்படவுள்ள 84 குடியிருப்புதாரர்களுக்கு ரூ. 20.16 லட்சம் கருணைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகுள்பட்ட இராஜா தோட்டம் திட்டப்பகுதியில் 1974 - 75 ஆம் ஆண்டு 280 சதுர அடியில் கட்டப்பட்ட 84 அடுக்குமாடி குடியிருப்புகள் தற்பொழுது பழுதடைந்த நிலையில் உள்ளது. வாரியத்தின் கட்டட வல்லுனர் குழு ஆய்வு செய்து பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.     

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் மறு குடியமர்வு செய்யவுள்ள குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையினை ரூ.8000/-த்திலிருந்து ரூ.24000/- ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி, இராஜா தோட்டம்  திட்டப்பகுதியில் மறு குடியமர்வு செய்யவுள்ள 84 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக தலா ரூ.24000/- வீதம் மொத்தம் ரூ.20.16 லட்சத்திற்கான காசோலைகளையும்,  தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளையும்  குடியிருப்புதார்களுக்கு முதல்வர் வழங்கினார்.                     

இத்திட்டப்பகுதியில் உள்ள பழுதடைந்த 84 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் புதிதாக 400 சதுர அடியில், தூண்தளம் மற்றும் 9 அடுக்குமாடிகளுடன் 162 குடியிருப்புகள் ரூ.24.30 கோடி செலவில் கட்டப்படவுள்ளது.

ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். இதில் ரூ.7 லட்சம் மாநில அரசு மானியமாகவும், ரூ.6.09 இலட்சம் மாநில அரசின் உட்கட்டமைப்பு நிதியாகவும், ரூ.1.50 இலட்சம் மத்திய அரசு மானியமாகவும் வழங்கும். மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக 20 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.250/- அல்லது ஒரே தவணையாக ரூ.41,000/- செலுத்தும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன், 400 சதுர அடியில் கட்டப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் 300 லிட்டர் கொள்ளளவு கான்கீரிட் நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். மேலும், 2 மின் தூக்கிகள் (Lift), மின் ஆக்கிகள் (Generator), தெரு விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளும்  அமைக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஸ்குமார் எஸ்.மக்வானா, இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com