

பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள அல்லிகுண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதைக் கண்டித்தும், புதிய கட்டடம் கட்டித்தரக் கோரியும் வலியுறுத்தி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
இதையும் படிக்க- அஃப்தாப் அமீனை தூக்கிலிட வேண்டும்: ஷ்ரத்தா தந்தை
மாநிலம் முழுவதும் ஏராளமான அரசுப் பள்ளிக் கட்டடங்கள் இந்த லட்சணத்தில்தான் உள்ளன. கல்வித் துறைக்கு ஆண்டுக்கு ரூ.37000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால், பள்ளிக் கட்டடங்கள் மிகவும் சேதமடைந்தும், இடிந்துவிழும் நிலையிலும் இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
தமிழகம் முழுவதும் மழை வலுத்துள்ள சூழலில், சேதமடைந்த பள்ளிக் கட்டடங்களால் மாணவர்களுக்கு ஆபத்து நேரிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, உடனடியாக பள்ளிக் கட்டடங்களைச் சீரமைக்கவும், புதிய கட்டடங்களைக் கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.