தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை வழங்கப்பட்டிருப்பதால், செவ்வாய்க்கிழமை (டிச.13) தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளிக் கட்டடங்களின் நிலைத்தன்மை, பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியில் உள்ள கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள், மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்தல், மீண்டும் பள்ளி திறக்கப்படும் போது மாணவர்களுக்கு பாதுகாப்பான கல்வி கற்கும் சூழ்நிலைகளை உறுதி செய்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிவளாகத்தில் உள்ள பழைய பயன்பாடற்ற பள்ளி கட்டடங்கள் நிலை குறித்து உயர் அலுவலர்களுக்கு அறிக்கை வழங்கவும் மற்றும் பள்ளி நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் த.மோகன் உத்தரவிட்டுள்ளார்.