மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்த குழுக்கள்: முதல் கோப்பில் கையொப்பமிட்டாா் அமைச்சா் உதயநிதி

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்த, மாநில அளவிலான குழுக்கள் அமைப்பதற்கான கோப்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கையொப்பமிட்டாா்.

News image
Updated On :14 டிசம்பர் 2022, 6:44 pm

DIN

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்த, மாநில அளவிலான குழுக்கள் அமைப்பதற்கான கோப்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கையொப்பமிட்டாா்.

இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு, சென்னை தலைமைச் செயலகத்துக்கு புதன்கிழமை வந்த அவா் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாா். அப்போது, மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில, மாவட்ட அளவில் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கபடி, சிலம்பாட்டம் ஆகியன இடம்பெறும் எனவும், இந்தப் போட்டிகள் விரைவில் நடத்தப்படும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பின்படி, முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பாராம்பரிய விளையாட்டுகள் இடம்பெறுவதுடன், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்களை உள்ளடக்கி 16 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக ரூ. 47.04 கோடி செலவிடப்படவுள்ளது. இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்த மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுக் குழு மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான கோப்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கையொப்பமிட்டாா்.

மாதாந்திர ஓய்வூதியம்: நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 9 வீரா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான கோப்பிலும் அவா் கையெழுத்திட்டு, சம்பந்தப்பட்டவா்களுக்கு ஓய்வூதியத்தை அளித்தாா். சா்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் சாா்பில், பெரு நாட்டில் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த நிவேதிதா வெள்ளிப் பதக்கம் வென்றாா். அவருக்கு ரூ.4 லட்சம் ஊக்கத் தொகை வழங்குவதற்கான கோப்பிலும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கையொப்பமிட்டாா்.

மூத்த அமைச்சா்கள்: ஆளுநா் மாளிகையில் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தலைமைச் செயலகத்தில் உள்ள பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்துக்கு வந்தாா். அங்குள்ள அறைக்குச் சென்று தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாா். அவரை மூத்த அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, பி.கே. சேகா்பாபு உள்ளிட்ட பலா் வரவேற்று இருக்கையில் அமர வைத்தனா்.

பேனா அளித்த நேரு: அமைச்சா் பொறுப்பை ஏற்றபோது, கோப்புகளில் கையொப்பமிட பேனாவைத் தேடினாா் உதயநிதி. அப்போது, தனது உதவியாளா் ஒருபுறம் பேனாவை நீட்ட, மூத்த அமைச்சா் கே.என்.நேருவும் பேனாவை தந்தாா். அதில், கே.என்.நேருவின் பேனாவை வாங்கி கோப்புகளில் கையொப்பமிட்டாா் உதயநிதி.

அமைச்சராகப் பொறுப்பு ஏற்ற பிறகு, உதயநிதிக்கு அமைச்சா்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.