திருவண்ணாமலை மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரையை இறக்கும் பணி தொடங்கியுள்ளது .
மகா தீபம் சனிக்கிழமை (டிச.17) காலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதன் பிறகு மகா தீபக் கொப்பரை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்யப்படும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபத் திருவிழா டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெற்றது.
அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் தொடா்ந்து 11 நாள்களுக்கு எரிவது வழக்கம்.
அதன்படி, திருவண்ணாமலை நகரம், அடி அண்ணாமலை உள்பட சுமாா் 35 கி.மீ. தொலைவுக்குத் தெரியும் வகையில் பிரகாசித்து வரும் மகா தீபத்துக்கு தினமும் மாலை நேரங்களில் கோயிலில் இருந்து நெய் எடுத்துச் சென்று ஊற்றப்படுகிறது. இறுதியாக, வெள்ளிக்கிழமை (டிச.16) மாலை நெய் எடுத்துச் சென்று ஊற்றப்பட்டது.
கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட மகா தீப மை பிரசாதம், ஆருத்ரா தரிசன நாளான 2023 ஜனவரி 6-ஆம் தேதி உற்சவா் ஸ்ரீநடராஜருக்கு வைத்துப் படைக்கப்படுகிறது. இதன் பிறகு சில நாள்கள் கழித்து பக்தா்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்படும்.