சென்னை: கருவுற முடியாத இரண்டு பெண்கள் தங்களது தாயின் கருப்பையை தானமாகப் பெற்றிருக்கும் அரிய நிகழ்வு தமிழகத்தில் முதல் முறையாக நடந்திருக்கிறது.
பிறக்கும் போது கருப்பை இல்லாமல் பிறந்த 25 மற்றும் 27 வயதுடைய இரண்டு பெண்களுக்கு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், தங்களது தாயிடமிருந்து கருப்பையை எடுத்து பொருத்தும் மிகவும் அரிதான இந்த அறுவை சிகிச்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இரு பெண்களுக்கும் அவர்களது அம்மாக்களிடமிருந்து பெறப்பட்ட கருப்பை பொருத்தப்பட்டுள்ளது. அது இயல்பாக செயல்படத் தொடங்கிவிட்டால், வரும் மே மாதத்தில் ஐவிஎஃப் முறையில் குழந்தைப் பேறு உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை, கருப்பை இல்லாமல் பிறந்த பெண்களுக்கு, வாடகைத் தாய் அல்லது குழந்தையை தத்தெடுப்பது மட்டுமே தீர்வாக இருந்து வந்தது. ஆனால், வளர்ந்து வரும் மருத்துவ உலகின் உச்சம் காரணமாக, அவர்களே கருவைச் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருப்பதாக மருத்துவ உலகம் பெருமிதம் கொள்கிறது.
இந்தப் பெண்களுக்கு வழக்கமாக இருப்பது போல சினைப்பை, கருப்பைக் குழாய் எல்லாம் இருந்து, கருப்பை மட்டும் இல்லாமல் பிறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
சட்டப்படி, ரத்த சம்பந்தமுடையவர்களிடமிருந்து மட்டுமே கருப்பையை தானமாகப் பெற முடியும் என்பதால், இவ்விரு பெண்களுக்கும் அவர்களது தாயராருடைய கருப்பை தானமாகப் பெறப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.
கருப்பை தானம் பெற்ற இரண்டு பெண்களுமே மாதவிடாய் சுழற்சி நிறைவடைந்து, எந்த விதமான இணை நோய்களும் இல்லாதவர்களாக இருந்தனர்.
சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக இந்த அறுவை சிகிச்சை நடத்தி முடீக்கப்பட்டுள்ளது. இதில், தாயிடமிருந்து கருப்பையை எடுக்க 8 மணி நேர அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதும் உள்ளடக்கம் என்று மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.