நாகர்கோவில்: ஆஞ்சனேயர் ஜெயந்தியை முன்னிட்டு குமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள 16 அடி விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு 16 வகையான சோடஷ அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆஞ்சனேயர் ஜெயந்தி விழா வியாழக்கிழமை (டிச.22) காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 8 மணிக்கு நீலகண்ட விநாயகர் அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம், தொடர்ந்து 11.30 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், மாலை 6 மணிக்கு காலபைரவர் தீபாராதனையும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு ஸ்ரீ ராமருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு மஞ்சள் பொடி, அரிசிமாவுப் பொடி, நெய், விபூதி, இளநீர், தயிர், நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு, திரவியப்பொடி, குங்குமம், பன்னீர், சந்தனம், பால், தேன், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் ஆகிய 16 வகை சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.
இதில் விஜய் வசந்த் எம்.பி. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், குமரி மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சனேயரை வழிபட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.