
சேலம்: குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் இருப்பதை அறிந்ததால், மனமுடைந்த நெசவு தொழிலாளி குடும்பத்தோடு காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக, கர்நாடகா எல்லையான அடிப்பாளாறு பகுதியில் உள்ள காவிரி நீர்த்தேக்கத்தில் நான்கு சடலங்கள் மிதப்பதாக அப்பகுதியில் கால்நடை மேய்ப்பவர்கள் கொளத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் காவல் துறையினர் சடலம் கிடந்த இடத்தில் ஆய்வு செய்த போது அவரது இரு சக்கர வாகனத்தில் யுவராஜ் என்ற உறவினரின் தொலைபேசி எண் இருந்துள்ளது.
இதனை அடுத்து தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியதில் சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி நெசவாளர் காலனி பகுதி சேர்ந்தவர் யுவராஜ், மனைவி வான்விழி, மகள்கள் நிதிக்ஷா என்ற நேகா, மற்றும் அக்சரா, என்பது தெரிய வந்தது.
மேலும், யுவராஜின் மூத்த மகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகலாக நீரிழிவு நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அவரது இளைய மகளுக்கும் நேற்று முன்தினம் பரிசோதனை செய்ததில் அவருக்கும் நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் மனமுடைந்த தம்பதி தனது இரண்டு மகள்களையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மேட்டூர் அருகே உள்ள தமிழக கர்நாடக எல்லையான அடிப்பாளாறு காவிரியில் வீசி கொலை செய்துவிட்டு தம்பதிகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக கொளத்தூர் காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயால் பாதித்த இரண்டு மகள்களின் பரிதாப நிலையை பார்க்க முடியாமல் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. தண்ணீரில் சடலமாக கிடக்கும் நால்வரையும் மீட்க ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல்துறையினரும் சென்னம்பட்டி மற்றும் மேட்டூர் வனத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.