நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு ஶ்ரீ தாணுமாலய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி பெருந்திருவிழா 10 நாள்கள் நடைபெறும்.
நிகழாண்டுக்கான திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாணுமாலயன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றினார். வட்டப்பள்ளிமடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகள் செய்தார்.
கொடியேற்று விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து திருமுறை பெட்டகம் ஊர்வலம் கோயிலில் இருந்து தொடங்கி 4 ரத வீதிகள் வழியே சென்று கோயிலை அடைந்தது. 9 ஆம் திருவிழாவான ஜனவரி 5 ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது இதில் சுவாமி தேர், அம்பாள் தேர், விநாயகர் தேர் என 3 தேர்கள் உலா வரும். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடைபெறுகிறது.
ஜனவரி 6 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் மாலை 5 மணிக்கு நடராஜ பெருமான் வீதியுலா நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.