ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை: குற்றவாளிகள் சிக்கியது எப்படி? 

திடீர் திருப்பமாக, மஸ்தான் சகோதரரின் மருமகன், கார் ஓட்டுநர் உள்ளிட்டோர் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

News image

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை: குற்றவாளிகள் சிக்கியது எப்படி? 

Updated On :30 டிசம்பர் 2022, 4:19 pm IST

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், அவரை வாய், மூக்கைப் பொத்தி குற்றவாளிகள் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் மஸ்தான், உடல் நலக் குறைவால் கடந்த வாரம் வியாழக்கிழமை காலமானதாக தகவல்கள் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக, மஸ்தான் சகோதரரின் மருமகன், கார் ஓட்டுநர் உள்ளிட்டோர் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

முதற்கட்டமாக, அவரது மூக்குப் பகுதியில் காயம் இருந்ததைப் பார்த்த மஸ்தானின் மகன், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், அவரது உடல் கூறாய்விலும் அவர் மூச்சுத் திணறி பலியானதாக மருத்துவ அறிக்கை வெளியானது.

இதையடுத்துத்தான், அவருக்கு மூச்சுத் திணறல் எப்படி நேரிட்டிருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவருடன் காரில் சென்ற, மஸ்தான் சகோதரரின் மருமகன் இம்ரானிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை அளித்திருந்தார். இது அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக மஸ்தான் உயிரிழக்கும் போது அவருடன் இருந்த அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், மஸ்தானின் வாய், மூக்கைப் பொத்தி கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினா் நல உரிமை பிரிவுச் செயலாளராக இருந்தவா் டாக்டா் மஸ்தான் (66). 1995-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையின் அதிமுக உறுப்பினராக இருந்தாா். இதைத் தொடா்ந்து, திமுகவில் இணைந்தாா். அந்தக் கட்சியில் சிறுபான்மையினா் நலப் பிரிவில் பொறுப்பு வகித்து வந்தாா். திமுக ஆட்சிக்கு வந்ததும், அவருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் பொறுப்பு அளிக்கப்பட்டது. குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வந்தாா்.

மஸ்தான், தனது மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார்.  23ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்துக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் சந்தித்து அவர் அழைப்பிதழ் கொடுத்து வந்த நிலையில்தான் மரணம் அடைந்தார்.

சம்பவத்தன்று, சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் வியாழக்கிழமை காலை காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால், இதனை சந்தேக மரணமாக கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது குடும்பத்தினரும் புகார் அளித்திருந்தனர். 

இந்த நிலையில், முன்னாள் எம்.பி. மஸ்தான் மரணத்தில் திடீர் திருப்பமாக அவரது சகோதரரின் மருமகன், கார் ஓட்டுநர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர்கள் ஐந்து பேரும் சேர்ந்துதான் மஸ்தானைக் கொலை செய்திருப்பது தெரிய வந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ்கள் கொடுத்து வந்த மஸ்தான் உறவினர்களாலேயே கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.