திருவெண்காடு அருகே நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நாளை இரவு கருடசேவை உற்சவம் நடைபெறுகிறது.
இதில் நாங்கூர் பகுதியைச் சுற்றியுள்ள 11 பெருமாள்கள் கலந்துகொண்டு பக்தர்களுக்குக் காட்சி அளிக்கின்றனர். அப்போது அந்த பெருமாள்களைப் பற்றி திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்கள் பாடப்பட்டு தீபாராதனை காட்டப்படும். இந்த கருட சேவை உற்சவத்தில் கலந்துகொள்ள வருமாறு திருமங்கையாழ்வார் ஒவ்வொரு பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை அழைப்பது வழக்கம்.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை திருமங்கை ஆழ்வார் திருநகரி கோவிலிலிருந்து பக்தர்கள் புடைசூழ நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலை நோக்கி மேளதாளம் முழங்க எடுத்துச் செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து குரவலூர், மங்கைமடம், காவளம் பாடி, திருமணிக்கூடம் ஆகிய பகுதிகளில் எழுந்தருளியுள்ள பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
ஆழ்வார் செல்லும் வழி எங்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பட்டு வஸ்திரம், தேங்காய் பழம் உள்ளிட்டவைகளை நெய்வேதியம் செய்தனர். இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், திருநகரி ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரராஜன், பக்த ஜன சபை தலைவர் ரகுநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.