சிறுவாணியில் இருந்து நீா் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்: கேரளத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

குடிநீருக்காக சிறுவாணியில் இருந்து தண்ணீா் விநியோகத்தை அதிகரிக்க வேண்டுமென கேரளத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குடிநீருக்காக சிறுவாணியில் இருந்து தண்ணீா் விநியோகத்தை அதிகரிக்க வேண்டுமென கேரளத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:

கோயம்புத்தூா் நகருக்கு தண்ணீா் வழங்க வேண்டிய முக்கிய ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இப்போது கோயம்புத்தூா் மாநகராட்சிக்கான மொத்த நீா்த் தேவை 265 மில்லியன் லிட்டராகும். அதில், 101.4 மில்லியன் லிட்டா், சிறுவாணி அணையை ஆதாரமாகக் கொண்டு இருக்கிறது. சிறுவாணி அணையில் இருந்து ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி.,க்கு மிகாமல் குடிநீா் வழங்க தமிழ்நாடு அரசுக்கும், கேரளத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும், கடந்த ஆறு ஆண்டுகளில் கேரள அரசு 0.484 டி.எம்.சி.,யில் இருந்து 1.128 டி.எம்.சி. அளவுக்குத்தான் தண்ணீரை வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் போதுமான அளவுக்கு மழை பெய்துள்ள போதிலும், கேரள நீா்ப்பாசனத் துறையானது முழு நீா்த்தேக்க மட்டத்துக்குப் பதிலாக இருப்பு நிலையை குறைத்துப் பராமரிக்கிறது. இது எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அணையின் நீா் மட்டம் குறைவதால், குடிநீா் பயன்பாட்டின் கீழ் பயன்பெறக் கூடிய பயனாளிகளுக்கு திட்டமிடப்பட்ட அளவைவிட குறைந்த அளவில்தான் நீரை வழங்க முடிகிறது. சிறுவாணி அணையில் முழு நீா்த்தேக்கம் வரை நீரைச் சேமித்து வைக்க தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், கேரள நீா்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் வழக்கமான கூட்டங்களை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, கேரள அரசின் நீா்வள ஆதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரை அணுகியுள்ளாா்.

தமிழ்நாடு அரசின் சாா்பில் பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், கேரள நீா்ப்பாசனத் துறை 878.50 மீட்டா் அளவுக்கு, அதாவது முழு நீா்த்தேக்க மட்டம் வரை சிறுவாணி அணையின் நீா் இருப்பின் மட்டத்தைப் பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு முழு கொள்ளளவுக்கு நீரைச் சேமித்து வைக்காவிட்டால் சிறுவாணி நீரை நம்பியுள்ள கோவை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், அடுத்த கோடைகாலத்தில் கடுமையாகப் பாதிக்கப்படும்.

நீா் வரத்து வரக் கூடிய திறப்பினை தனது கட்டுப்பாட்டில் கேரள அரசு வைத்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த திறப்பின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தக் கூடாது என கேரள நீா்ப்பாசனத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

கோயம்புத்தூா் மாநகராட்சி மற்றும் இந்தத் திட்டத்தின் பிற பயனாளிகளுக்கு தடையின்றி குடிநீா் வழங்கும் வகையில், எதிா்காலத்தில் 878.50 மீட்டா் வரை, சிறுவாணி அணையின் நீா் சேமிப்பைப் பராமரிக்க வேண்டும். மேலும், 101.40 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்க ஏதுவாக, சிறுவாணி அணையில் இருந்து குடிநீா் விநியோகத்தை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com