ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ 3 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விசாரணைக்காக இன்று இரண்டாவது முறையாக இன்று ஆஜர் ஆனார்.
ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது மற்றும் அவரது உதவியாளர்கள் மீது அ.இ.அ.திமு.க.முன்னாள் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி என்பவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் கடந்த 15.11.2021-ம் தேதியன்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் அன்றைய தினம் அவர் தலைமறைவானார்.
8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 20 நாட்களாக தேடி வந்த நிலையில் கடந்த ஜனவரி 5 ம்தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கே.டி.ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் உச்சநீதிமன்ற ஜாமீனில் வெளி வந்துள் ளார். இந்நிலையில் பிப்., 12 இல் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இச்சூழலில் மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி இரண்டாவது முறையாக ஆஜரானார்.
அவரிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன்,காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.