சென்னை: பூந்தமல்லி சிறப்புச் சிறையில் இருந்து புழல் சிறைக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று (புதன்கிழமை) மாற்றப்பட்டார்.
இது குறித்த விவரம் வருமாறு:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறப்பு சிறையில் கடந்த 22-ஆம் தேதி அடைக்கப்பட்டார்.
ராயபுரம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழக்கில், ஜெயக்குமார் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் என்பதாலும்,வருமானவரி முறையாக செலுத்தி வருபவர் என்பதாலும் சிறையில் அவருக்கு “ஏ” வகுப்பு வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் பூந்தமல்லி சிறப்பு சிறையில் ஏ வகுப்புக்கான அறைகள், வசதிகள் கிடையாது. அங்கு “பி” வகுப்புக்கான அறைகள் மட்டுமே உள்ளன. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள், புழல்-2 சிறையில் ஏ வகுப்பு அறையில் ஜெயக்குமாரை அடைப்பதற்கு முடிவு செய்தனர்.
இதன்படி பூந்தமல்லி சிறையில் இருந்து இன்று (புதன்கிழமை) மாலை பலத்த பாதுகாப்புடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அழைத்து வரப்பட்டு, புழல்-2 சிறையில் உள்ள 'ஏ வகுப்பு அறையில் அடைக்கப்பட்டார்.