நாகர்கோவில்: குமரி மாவட்டம், மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா பிப்,27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னர் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் காலை 8 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டது.
இதில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட பாஜக பொருளாளர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் கேரளம் மாநிலத்தில் இருந்தும் இருமுடி கட்டி வந்த பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மார்ச் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில், 6 ஆம் திருவிழாவான வெள்ளிக்கிழமை(மார்ச்.4) அன்று வலிய படுக்கை பூஜையும், 9 ஆம் திருவிழாவான மார்ச் 7 ஆம் தேதியன்று இரவு பெரிய சக்கர தீ வெட்டி ஊர்வலமும், நிறைவு நாளான மார்ச் 8 ஆம் தேதி இரவு 11 மணி முதல் 12 மணி வரை ஒடுக்கு பூஜையும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.