கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த கேரளத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
கேரளத்தின் பட்டாம்பி நகராட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.பி.தங்கல் என்பவர் இன்று காலை இண்டிகோ விமானத்தில் பெங்களூரு செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது பைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ததில் துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை விசாரணை செய்ததில், பையில் துப்பாக்கி இருந்தது அவருக்கு தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணைக்காக பீளமேடு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கூறுகையில்,
வழக்கமான சோதனயின் போது துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், துப்பாக்கி எடுத்துச் செல்வதற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. அவர் செயலாளராக பதவி வகிக்கும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வாங்குவதற்காக கோவையிலிருந்து பெங்களூரு வழியாக அமிருதசரஸ் செல்லவிருந்தார் என்றனர்.
இதற்கு முன்னதாக, கடந்த 2007 பிப். 16ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து தில்லி செல்ல வந்த தற்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயன் துப்பாக்கி வைத்திருந்ததை அடுத்து அவரிடம் எழுத்துப்பூர்வ கடிதம் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.