
காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திக்கொண்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வருவோர் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் பரிசோதித்த பின்னரே கோயிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா அறிவித்திருந்தார்.
திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமையில் பல்லாயிரக்கணக்கானோர் வருவது வழக்கம். கரோனா பரவலையொட்டி நளன் தீர்த்தக் குளத்திலிருந்து தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டது. சனிக்கிழமை அதிகாலை முதல் இக்கோயிலில் திரளானவர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்யக்கூடிய நிலையில், இன்று சனிக்கிழமை குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் வந்திருந்தனர்.
கோயில் வாயிலில் பக்தர்களிடம் கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை பரிதோதித்த மருத்துவக் குழுவினர்.
கோயில் வாயிலில் மருத்துவக் குழுவினர், தன்னார்வலர்கள் பக்தர்களிடம் கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திக்கொண்ட சான்றிதழை பரிதோதித்தனர். பின்னர் வெப்பமானி மூலம் உடல் பரிசோதனை செய்யப்பட்டு கோயிலுக்கு அனுப்பினர்.
ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருநள்ளாறுக்கு வெள்ளிக்கிழமை இரவு முதல் பக்தர்கள் வரத்து நிகழ்வாரம் இல்லாமல் போய்விட்டது. காலையில் புறப்பட்டு வந்த வெளியூர் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்கின்றனர்.
வழக்கமாக திருநள்ளாறு நகரப் பகுதி சனிக்கிழமையில் பரபரப்பாக காணப்படும் நிலையில், இன்று அந்த காட்சியை காணமுடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.