சென்னை: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா-ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 23) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், முழு ஊரடங்கை முன்னிட்டு, தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மதுபான பார்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முழு ஊரடங்கு
ஜனவரி மாதத்தில் கடந்த 9-ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், மூன்றாவது வாரமாக வரும் ஞாயிற்றுக்கிழமையும் (ஜன. 23) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வரும் 30-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்குடன் சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில், முழு ஊரடங்கு மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான வரும் 23-ஆம் தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.