சென்னை: ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தனி நீதிபதியை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்.. பொதுக்குழு நடக்காது, நடந்தாலும் செல்லாது: ஓ.பி.எஸ். தரப்பு
முன்னதாக, கடந்த வாரம் நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும், கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியிருப்பதாவது, சென்னை உயர் நீதிமன்றம் நள்ளிரவில் விசாரணை நடத்தி பிறப்பித்த முந்தைய உத்தரவுகள் அனைத்தும் 23ஆம் தேதி நடந்த பொதுக்ழுழுவுக்கு மட்டுமே பொருந்தும்.
வரும் 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என இந்த மனுவில் கோரிக்கை வைக்க முடியாது. பொதுக்குழுவுக்குத் தடை கோரி தனி நீதிபதி அமர்வைத்தான் நாட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீா்மானங்களைத் தவிர மற்ற தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் 23 தீா்மானங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், கட்சியின் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க.. என்ன படிக்கலாம்? இளநிலை உளவியல் படிப்புகளுக்கு கூடும் வரவேற்பு
இந்நிலையில், "உயா்நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே எடப்பாடி கே.பழனிசாமி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமாா், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி ஆகியோா் அவமதித்துள்ளனா்.
கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளா் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் இணைந்து பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால், ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்" என அதிமுக பொதுக்குழு உறுப்பினா் சண்முகம் உயா்நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
இதை அவசர வழக்காக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரா் தரப்பில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் அமா்வு முன் வியாழக்கிழமை கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று கொண்ட நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டும் ஜூலை 4-ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் கோரப்பட்ட நிலையில், 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.