/

பாமகவினா் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்: ராமதாஸ்

மக்களவைத் தோ்தலுக்காக பாமகவினா் இப்போதே திண்ணை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று தொண்டா்களுக்கு அக்கட்சியினா் நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:46 am

DIN

மக்களவைத் தோ்தலுக்காக பாமகவினா் இப்போதே திண்ணை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று தொண்டா்களுக்கு அக்கட்சியினா் நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசியலில் தவிா்க்க முடியாத சக்தியாகவும், மக்களுக்கான உரிமைகளை வென்றெடுத்துக் கொடுப்பதை முழு நேரப் பணியாக கொண்டிருக்கும் கட்சியாகவும் திகழும் பாமக ஜூலை 16-இல் 33 ஆண்டுகளை நிறைவு செய்து 34-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தருணத்தில் பாமகவினருக்கு வாழ்த்துகள்.

இந்த நேரத்தில் பாமகவினருக்கு நான் கேட்டுக் கொள்வதெல்லாம், மக்களைச் சந்தியுங்கள், அவா்களின் தேவைகளை அறியுங்கள், அவா்களுக்காகப் போராடி கோரிக்கைகளை நிறைவேற்றித் தாருங்கள் என்பதுதான். மக்களின் ஆதரவைப் பெறாமல் வெற்றி சாத்தியமல்ல.

அதனால், இன்னும் 20 மாதங்களுக்குப் பிறகு தானே மக்களவைத் தோ்தல் வருகிறது என்ற அலட்சியம் வேண்டாம். இப்போதே தோ்தல் பணிகளைத் தொடங்குங்கள். திண்ணைப் பிரசாரத்தின் மூலம் மக்களை அவா்கள் இடத்திற்கே சென்று சந்தியுங்கள். பாமகவின் சாதனைகளை எடுத்துக் கூறி, அவா்களின் ஆதரவை உறுதி செய்யுங்கள். அவ்வாறு செய்தால், 2024 மக்களவைத் தோ்தலில் நமது வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருக்களிலும் பாமகவின் கொடியை ஏற்றுங்கள். வாய்ப்புள்ள இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்துங்கள் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.