தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, கஞ்சா, உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையெடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி சுனாமி காலனி பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், மற்றும் போலீஸார் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை மறைத்து போலீசார் சோதனை நடத்தினர். அதில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த ஆண்டி செல்வம் என்பது தெரியவந்தது. மேலும், அவர் தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் கஞ்சாவை கடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக டிரைவரை கியூ போலீசார் கைது செய்து லாரியில் இருந்த 450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்த கஞ்சாவின் மதிப்பு தமிழகத்தில் 7 லட்சம் ரூபாயும் இலங்கையில் பல மடங்கு எனவும் போலீஸார் தெரிவித்தனர்.