பஸ்ல பாட்டுப் போடக் கூடாது: நிர்வாகம் அறிவுறுத்தல்

அரசுப் பேருந்துகளில் சத்தமாக பாடல்களை ஒலிபரப்புவதற்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் தடை விதித்துள்ளது.
பஸ்ல பாட்டுப் போடக் கூடாது: நிர்வாகம் அறிவுறுத்தல்

அரசுப் பேருந்துகளில் சத்தமாக பாடல்களை ஒலிபரப்புவதற்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் தடை விதித்துள்ளது.

பேருந்துகளில் சத்தமாக திரைப்பட பாடல்களை ஒலிபரப்புவதன் மூலம், பேருந்து நிறுத்தம் குறித்து நடத்துனர் கூறுவது பயணிகளுக்கு சரியாக கேட்பதில்லை என புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது, ''பேருந்துகளில் அதிக சத்தத்தில் பாடல்கள் ஒலிபரப்பப்படுவதால், பேருந்து நிறுத்தம் குறித்து முன்கூட்டியே நடத்துனர் கூறுவது பயணிகளுக்கு கேட்பதில்லை. இதுமட்டுமின்றி பேருந்து நிறுத்தம், வழித்தடம், கட்டணம் உள்ளிட்டவை குறித்து பயணிகளுக்கு உள்ள சந்தேகங்களை நடத்துனரிடமோ அல்லது சக பயணியிடமோ கேட்டு விளக்கம் பெற முடியாத நிலை ஏற்படுகிறது''.

மாநகரப் பேருந்தைப் பயன்படுத்தும் மற்றொருவர் கூறுகையில், பயணத்தின்போது அதிக ஒலியுடன் கூடிய பாடல்களால், செல்லிடப்பேசிகளில் அலுவலகம் அல்லது வீட்டிலிருந்து வரும் முக்கியமான அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. இதனால் பயண நேரங்களில் செல்லிடப்பேசிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. பயணிகளில் கோரிக்கைக்கு பிறகே பாடல்களில் சத்தம் குறைக்கப்படுகிறது.

பேருந்துகளில் உள்ளடக்கமாக கொடுக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளில் (சிவப்பு நிற மாநகரப் பேருந்துகளில் உள்ளடக்கமாக ஒலிபெருக்கிகள் உள்ளன. ஜிபிஎஸ் மூலம் பேருந்து நிறுத்த அறிப்பை அவை வழங்குகின்றன.) அல்லது தனிநபர் மூலம் ஓட்டுனர் / நடத்துனர் இருக்கை அருகே இணைக்கப்படும் ஒலிபெருக்கிகளில்  பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. 

இரவு நேரங்களில் ஒரு சில பேருந்து ஓட்டுனர்கள் இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களை ஒலிபரப்புகின்றனர். இதனால், இரவு நேரங்களில் பயணிக்கும் பெண் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

ஓட்டுனர்கள் தங்களது நீண்ட நேரப் பணியின் இடையே இளைப்பாறுதலாக பாடல்களைக் கேட்டாலும், பயணிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால், மாநகரப் பேருந்திகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளை நீக்க வேண்டும் என அனைத்து பணிமனைகளுக்கும் மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

இதனிடையே பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஒலிப்பெருக்கி மூலம் பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் அம்சத்தை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக 500 பேருந்துகளில் இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் 3,300 பேருந்துகளில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுப் பேருந்துகளில், பயணிகள் கூட சத்தமாக பாடல்களைக் கேட்பதற்கு கர்நாடக அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com