கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடல் மறுபிரேத பரிசோதனை விவகாரத்தில் தந்தை கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூா் தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். மேலும், அவர் வெளியிட்ட உத்தரவில், மாணவியின் பெற்றோர் மீது இரக்கம் கொள்கிறேன். ஆனால் மற்றவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடாது.
உடற்கூராய்வுக்குப் பின் மாணவியின் உடலை எதிர்ப்பின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தந்தைக்கு நீதிபதி அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை 3 மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்ய வேண்டும். மறுபிரேத பரிசோதனையின் போது மாணவியின் தந்தை, தனது வழக்குரைஞர் கேசவனுடன் உடன் இருக்கவும் மறு உடல் பிரேத பரிசோதனையை முழுமையாக விடியோ பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது, அவர்களுக்காக இரக்கப்படுகிறேன் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இந்த நிலையில் மறுபிரேத பரிசோதனை செய்யும் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க தந்தை ராமலிங்கம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இதனை நிராகரித்த நீதிபதிகள், தனிநீதிபதி உத்தரவில் மேல்முறையீடு வேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என்று அறிவுறுத்தினர்.