ஆன்லைன் ரம்மி தடைக்கு விரைவில் அவசர சட்டம்: நீதிபதி தலைமையில் குழு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக அவசர சட்டத்தை வகுக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
ஆன்லைன் ரம்மி தடைக்கு விரைவில் அவசர சட்டம்: நீதிபதி தலைமையில் குழு
Published on
Updated on
1 min read

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக அவசர சட்டத்தை வகுக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து மாநில அரசின் அறிவிப்பு விவரம்: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 25-2-21-இல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், 3-8-21-இல் வழங்கிய தீா்ப்பில், இந்தச் சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதனை ரத்து செய்தது.

மேலும், அந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூா்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் 13-11-21-இல் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மேலும், கேரளம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயா் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீதிபதி தலைமையில் குழு: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஈா்க்கப்பட்டு அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடா்ந்து நடந்து வருகின்றன. இந்த பாதிப்புகள் தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 9) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு, தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இத்தகைய விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இத்தகைய விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆய்வு செய்து அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க ஒரு குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

ஓய்வு பெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான இந்தக் குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநா் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமாா், காவல் துறை கூடுதல் இயக்குநா் வினித் தேவ். வான்கடே ஆகியோா் இடம்பெறுவா்.

இரண்டு வாரங்கள்: அரசு அமைத்துள்ள குழுவானது தனது பரிந்துரைகளை இரண்டு வாரங்களில் அளிக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி போன்ற சமூக பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காணப்படும். இதற்கென அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இந்தச் சட்டமானது பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் முன்மாதிரி சட்டமாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com