
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரி நாதர் திருக்கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாறு நதிக்கரையோரத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை அழகிரி நாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
கரோனா பேரிடர் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டிற்கான தேரோட்ட வைபவம் கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் வைபவங்கள் நடத்தப்பட்டன.
இதையும் படிக்க | கோடியக்காடு குழகர் கோயில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்
இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை தேரோட்ட வைபவத்தை முன்னிட்டு அதிகாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கு பல்வேறு விதமான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு விதமான வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிரிநாதர் பெருமாள் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அப்போது,பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு தேரை இழுத்தனர்.
ராஜகணபதி கோயில் அருகில் இருந்து புறப்பட்ட தேரோட்டம் இரண்டாவது அக்ரஹாரம் சின்னக்கடை வீதி வழியாக தேர்பவனி வந்து மீண்டும் ராஜகணபதி கோயில் அருகே வந்து அடைந்தது. தொடர்ந்து திருத்தேரில் எழுந்தருளி உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிரிநாதர் பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி தேர் செல்லும் சாலைகளில் மின்சார வயர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.