கம்பம்: இடுக்கி மாவட்டத்தை உச்ச நீதிமன்றம் சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதே நேரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.
கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம் சூழல் உணர்திறன் மண்டலமாக செயல்படுத்த, 1 கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதியை விட்டு, மக்கள் வாழ்விடங்களை மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஜூன் 10 ஆம் தேதி ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டது. வியாழக்கிழமை கேரள எதிர்கட்சியான காங்கிரஸ் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது.
இதனால் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும் கம்பம், கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண், பெண் கூலி தொழிலாளர்கள் வேலைகளுக்கு செல்லவில்லை.
சர்வதேச சுற்றுலா தலமான குமுளியில் தனியார் பேருந்துகள், வாடகை கார், வேன், ஆட்டோக்கள் இயங்கவில்லை, வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், சிறிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் கேரளம் மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டது, பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கியது.
இதையும் படிக்க | கிராம மக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி