இரட்டைத் தலைமை வேண்டாம், ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முழக்கத்துடன் அதிமுக இரண்டுபட்டிருக்கும் நிலையில், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார் வி.கே. சசிகலா.
சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு, மே 25ஆம் தேதி, செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, தான் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று நான்காண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வந்தபோது, தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது போல கூறியிருந்த கருத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.
அதாவது, தமிழகத்தில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்றும், விரைவில் அதிமுகவில் அம்மா ஆட்சி வரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க | என்ன, ஓ. பன்னீர்செல்வம் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரா ?
இதற்கிடையே, அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு, தற்போது ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்டியுள்ளார்.
அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி ஒற்றைத் தலைமைப் போர் மூண்டிருக்கும் நிலையில், அதற்கடுத்த நாளே சென்னையைச் சுற்றிலும் ஜூன் 26ஆம் தேதி மறுமலர்ச்சிப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சசிகலா அறிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே.. விட்டதைப் பிடித்த விக்ரம் (மாதித்தன்)? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல்...
தமிழ் மண் மற்றும் பெண்களின் மரியாதை காப்போம் என்ற பெயரில் சசிகலா அறிவித்திருக்கும் இந்த சுற்றுப் பயணம், சாலைகளில் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது போல அமையலாம் என்று கூறப்படுகிறது. தலைநகர் சென்னையின் பல இடங்களில் மக்களை சந்தித்து சசிகலா உரையாற்றவும் வாய்ப்பிருக்கிறது. சென்னை, திநகரில் உள்ள தனது இல்லத்திலிருந்து ஜூன் 26ஆம் தேதி 12.30 மணிக்கு புறப்படும் சசிகலா, தி.நகர், கோயம்பேடு, பூவிருந்தமல்லி, திருத்தணி, கோரமங்கலா, ஆர்.கே. பேட்டை வழியாக பயணிக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.