கோவை: பாடத்திட்டத்தில் பிற்போக்குத்தனமான கருத்துக்கள் புகுத்தப்படுவதைத் தடுக்க கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் நடைபெற்ற தென்மண்ட துணைவேந்தர்கள் கருத்தரங்கில் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
இதில், தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாணவர்களுக்கு தரமான கல்வியை கொண்டு செல்வது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கூறினார்.
மேலும் மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிற்போக்குத்தனமான கருத்துக்களை கல்வியில் புகுத்தி வருகிறது. கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவதே மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும்.
மாநில கல்விக்கொள்கை அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.