கரோனா இறப்பு பூஜ்ஜிய நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏறத்தாழ இரு ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தொற்றால் ஒருவா் கூட உயிரிழக்காத நிலை எட்டப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி கரோனாவால் வெள்ளிக்கிழமை ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. நோய்த் தொற்று பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டதும், ஒமைக்ரான் தீநுண்மியின் வீரியம் குறைவாக இருப்பதுமே அதற்கு காரணம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அதேவேளையில், உயிரிழப்பு இல்லை என்பதற்காக அலட்சியப் போக்குடன் செயல்படக் கூடாது என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொற்று குறைந்திருந்தாலும் மக்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைவில் தடுப்பூசி போட வேண்டும்.
கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கரோனா வீரியத்தோடு இருக்கிறது. கரோனா இறப்பு பூஜ்ஜிய நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உக்ரைனிலிருந்து 1890 மாணவர்கள் தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில், 1524 மாணவர்கள் தமிழக அரசின் செலவிலும், 366 மாணவர்கள் அவர்களின் சொந்த செலவிலும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.