சென்னையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வேன் மோதியதில் இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தீக்சித் என்ற மாணவர் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வேனில் வந்த மாணவர் தீக்சித், சக மாணவர்களுடன் வேனிலிருந்து இறங்கி சென்றபோது, தான் மறந்து வைத்த பொருளை எடுப்பதற்காக மீண்டும் வேன் அருகே வந்துள்ளார்.
மாணவர் வந்ததை அறியாத வேன் ஓட்டுநர் பூங்காவனம், வேனை பின்புறம் இயக்கியதில் மாணவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த மாணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே மாணவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு நேரில் வந்த மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய்த் துறை அதிகாரி இளங்கோ, காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை காவல்துறை கைது செய்த நிலையில், பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தனியார் பள்ளி மாணவர் பலி: முதல்வர், தாளாளர் மீது வழக்குப் பதிவு