விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுகவை சேர்ந்த ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையில் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 நபர்கள் வீடுகளிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் 4 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதி மன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் திங்கள் கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிபிசிஐடி மனுத்தாக்கல் மீதான விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், ஜூனத் அஹமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில் இவர்கள் நான்கு பேருக்கும் ஏழு நாள்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
இதனையடுத்து நான்கு பேரும் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.