ஜெயலலிதா மரணம்: சசிகலா தரப்பு விசாரணையும் நிறைவு
ஜெயலலிதா மரணம் குறித்த தங்கள் தரப்பு விசாரணை முடிவடைந்ததாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடையாததால் ஆணையத்தின் பதவிக் காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்ததால் ஆறுமுகசாமி விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததன்பேரில் சமீபத்தில் இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கியது. சமீபத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடமும் இரு நாள்கள் விசாரணை நடைபெற்றது.
இதுவரை 156 பேரிடம் விசாரணை நடந்துள்ள நிலையில், தங்கள் தரப்பு விசாரணை முழுவதுமாக முடிந்ததாக ஆணையம் தரப்பு கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் தங்கள் தரப்பு விசாரணை முடிந்ததாகக் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் அப்போலோ மருத்துவர்களிடம் வருகிற ஏப்ரல் 5, 6, 7 தேதிகளில் அப்போலோ தரப்பு சார்பில் குறுக்கு விசாரணை நடைபெற உள்ளது. அப்போலோ தரப்பு விசாரணையும் முடிவடைந்த பிறகு அறிக்கை தயார்செய்யப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
