கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. இதனால் ஏற்படும் அதிகபட்ச வெயில் 25 நாள்கள் வரை இருக்கும்.
தமிழகத்தில் நேற்று மட்டும் 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. அதிகபட்சமாக, வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் வாட்டியது.
கத்தரி வெயில் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:
‘தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதிகபட்சமாக வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்’ என்றார்.
மேலும், நிகழாண்டில் கத்திரி வெயில் இன்றுமுதல் மே 28-ஆம் தேதி வரை மொத்தம் 25 நாள்கள் நீடிக்கவுள்ளது. கத்திரி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும். பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகும். வேலூா், திருத்தணி உள்பட சில முக்கிய நகரங்களில் 110 டிகிரியை தொட வாய்ப்பு உள்ளது. மேலும் பகல் நேரங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
இதற்கிடையே, அந்தமான் அருகே வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், அடுத்த சில நாள்களுக்கு வெப்பம் குறையவும் வாய்ப்புள்ளது.