அவிநாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ராயம்பாளையம் புளிக்காடு தோட்டம் பகுதியில் வசித்து வரும் முருகேஷ் மகள் பவதாரிணி (15), அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில் இவர், கோழி பிடிப்பதற்காக தோட்டத்துக்கு சென்றவர் எதிர்பாராதவிதமாக நீருள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த, இவரது தாத்தா மாறய்யன், கட்டுமானப் பணியாளர் சிவக்குமார் ஆகியோர் கிணற்றில் குதித்து சிறுமியைக் காப்பாற்றி கிணற்றுக்குள் இருந்த மோட்டார் அமைக்கும் இடத்தில் அமர வைத்தனர்.
உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர், கிணற்றுக்குள் இருந்து பவதாரணி, மாறய்யன், சிவக்குமார் ஆகியோரை மீட்டனர். இச்சம்பவம் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.