நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. நூல் விலை உயர்வு காரணமாக 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த சில நாள்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இம்மாதம் கிலோ ரூ.40 உயர்ந்துள்ளது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், அனைத்து ரக நூல்களுக்கு இம்மாதம் முதல் வாரத்தில் கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் 2 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த பருத்தி, பஞ்சு, நூலை அத்தியாவசியப்பட்டியலில் சேர்க்க வேண்டும். உள்நாட்டுத் தேவைக்குப் போக மீதமுள்ள பஞ்சு, நூலை மட்டுமே ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.200 கோடி வரை பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்படவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.