சென்னை: உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று தனது குடும்பத்தாருடன் நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க பேரறிவாளனுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி, விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை தனது தாய், தந்தையுடன் பேரறிவாளன் சந்தித்தார்.
இதையும் படிக்க.. 'அவ்விய நெஞ்சத்தான்..' திருக்குறளுடன் பேசத் தொடங்கிய பேரறிவாளன்
முதல்வரை சந்தித்த பேரறிவாளன் தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் கைகுலுக்க கையை நீட்டினார். அவருக்கு கைகொடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பேரறிவாளனை நெருங்கி கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிறகு, உடன் வந்த அற்புதம்மாளை பார்த்ததும், அவரது இரு கரங்களைப் பிடித்துக் கொண்டு, அவருக்கும் தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் மிகவும் வாஞ்சையோடு பகிர்ந்து கொண்டார் முதல்வர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், தனது விடுதலைக்கு பேருதவியாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி செலுத்தும் விதமாக, சென்னை வந்த பேரறிவாளன், தனது தாய் மற்றும் தந்தையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் சார்பில் மிகவும் ஆணித்தரமான வாதங்களை முன் வைத்து, தனது விடுதலைக்கு உதவியமைக்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.