கடந்த சில நாள்களாக நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து அவரது சிஷ்யை ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், அவர் அளித்திருக்கும் விளக்கம்தான், நித்யானந்தாவுக்கு ஏதேனும் நேர்ந்திருக்குமோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது.
நித்யானந்தாவின் சிஷ்யை என்று தன்னைக் கூறிக் கொண்டிருக்கும் மானத்யா ஆத்மபிரியா கூறியிருப்பதாவது, கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் போலியான பொய்யான செய்தியை சில கும்பல் ஒன்று பரப்பி வருகிறது. நித்யானந்தாவின் உடல் நலம் குறித்து புரளியை பரப்பி வருகிறது.
பரமசிவநாரே நேரடியாக திருமேனி தாங்கி வந்து நித்யானந்தாவாக திருப்பணியை செய்து கொண்டிருக்கிறார். செய்து முடித்தே தீருவார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதில், அவரிடம் நேரடியாக தீட்சைப் பெற்ற நானும், என் சக சீடர்களும் சேர்ந்து இந்தக் கைலாசத்தை புனரமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுவோம் உறுதுணையாக இருப்போம். இதில் மாற்றுக் கருத்தில்லை.
நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், விட்டுவிட்டு ஒடிப்போக நாங்கள் ஒன்றும் பாவாடை சன்னியாசிகள் அல்ல. பரமசிவத்திடமிருந்து நேரடியாகவே தீட்சை பெற்ற சன்னியாசிகள். அதனால், இந்த கைலாசத்தை அழிக்கவும் முடியாது புனரமைப்பை நிறுத்தவும் முடியாது. நித்யானந்தாவுடன் இணைந்து இதைச் செய்வோம் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே நித்யானந்தா வேறு இப்படி சொல்லியிருந்தார்.. சமாதியில் இருக்கிறேன்; நான் இன்னும் சாகவில்லை: நித்தியானந்தா
இந்த விளக்கத்தில், விட்டு விட்டு ஓடிப்போவது குறித்தும், கைலாசத்தை நாங்கள் புனரமைப்போம் என்று கூறியிருப்பதும் சில பல சந்தேகங்களை மக்களுக்கு எழுப்புகிறது.