சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக! மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்களையும், படகுகளையும்  உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக! மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read


இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்களையும், படகுகளையும்  உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இப்பிரச்னையில் உடனடியாக தலையிட தமிழக அரசு மத்திய அரசை  வலியுறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் இரண்டு படகுகளுடன் ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம்  ராமேசுவரம் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சிறைபிடித்து துன்புறுத்துவது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது, சேதப்படுத்துவது என்பதை தொடர்ந்து செய்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது.

ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 534 விசைப்படகுகளில் அனுமதிச்சீட்டு பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.  

இந்நிலையில் இரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அப்பகுதிக்குவந்த இலங்கைக்கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாகக் தெரிவித்து தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கே.கிறிஸ்டோபர் என்பவருக்குச்சொந்தமான படகையும் அதில் சென்ற மீனவர்கள் எஸ்.லியோன், ஜாய்சன், எஸ். எஸ்ரா,  முருகன், நம்பு மிலன்,  காளிமுத்து, வினோத், நம்பு குமார் மற்றும்  க.அந்தோணி ராயப்பன்  என்பவருக்குச் சொந்தமான படகையும் அதில் சென்ற கே.அந்தோணி ராயப்பன், அருணாச்சலம்,  ஏ.பாண்டி, செந்தூர்பாண்டி, ஏ.ரபிஸ்டன், மருது, ஆர்.குமரன் ஆகிய 15 பேர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். 

இதே போன்று கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியும் 7 மீனவர்களையும் ஒரு படகையும் சிறைபிடித்துச்சென்றனர்.  தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் செய்து வருகின்றனர்.

சிறைபிடித்துச்செல்லப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்குக்கொண்டு சென்றுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வருகின்றன.  இது ராமேசுவரம் மீனவர்களிலேயே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேசுவரம் மீனவர்களையும் படகுகளையும் பிடித்துச் சென்ற இலங்கை கடற்படையை கண்டித்தும், தொடரும் இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் நடவடிக்கைகளை  தடுத்து நிறுத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
 
எனவே, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இப்பிரச்னையில் உடனடியாக தலையிட தமிழக அரசு மத்திய அரசை  வலியுறுத்த வேண்டுமென கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com