தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தாண்டு இதுவரை 89 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வின் 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 4-வது சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. இதில் அதிகமான மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்காம் சுற்று கலந்தாய்வு நவம்பர் 14-ம் தேதி நிறைவடைகிறது.
சென்ற ஆண்டு 80 ஆயிரம் சேர்ந்த நிலையில், இந்தாண்டு 89,585 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 4வது சுற்றுக்குப் பின் துணை கலந்தாய்வு நடத்தப்படும்.
கல்லூரி ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் இதற்கான பணி தொடங்கும் என்றார்.