வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம்(நவ. 9) குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இதன் காரணமாக தமிழகம், புதுவையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவ. 10 முதல் 13 ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை(நவ. 12) அதிகாலை தமிழகம் - புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வரை கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.