சென்னை: பிராமணர்களுக்கு எதிரானவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்று தான் கூறியதாக சமூக ஊடகங்களில் வெளியாவது பொய்யான தகவல் என்றும், இதை நான் கண்டிக்கிறேன் என்றும், பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளா்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது தமிழக பாஜக தலைமை.
பாஜக கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்ததால், காயத்ரி ரகுராம் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கப்படுவதாக மாநில தலைமை தெரிவித்திருந்தது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடா்ந்து, அவா் கே.அண்ணாமலையை மறைமுகமாக விமா்சித்து வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னா், பாஜகவுக்காக 8 ஆண்டுகளாக உழைத்தேன். இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. எனக்கு எதிரானவா்களின் சித்திரிப்பை ஏற்க முடியாது. மேலிடத் தலைமையிடம் என் விளக்கத்தை தெரிவித்தேன். பாஜகவில் மீண்டும் இணைந்து பணியாற்றுவேன் என்று காயத்ரி ரகுராம் கூறினார்.
இந்நிலையில், பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் கூறியதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. ஆனால், அந்த செய்தியை மேற்கோள் காட்டி, இது தவறான பதிவு, இதை நான் கண்டிக்கிறேன் என்று காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.