
ஜே.சி.டி. பிரபாகரன் தெரிவித்த ரூ.41,000 கோடி யாருடையது என்பதை தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ. 41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் தெரிவித்திருப்பது குறித்து, கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இதுகுறித்து தமிழக அரசு தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும் எனக் கூறியிருந்த ஜே.சி.டி. பிரபாகரன், அவ்வாறு தொடர்ந்து விமர்சித்தால் ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ட்விட்டரில் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க | நில ஆவணங்களை 22 மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு திட்டம்!
அதாவது, ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன் என்று ஜே.சி.டி பிரபாகரன், எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது என்றும், அது ஏதாவது கணக்கிற்கு உள்பட்டதா...? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அந்தத் தொகைக்கு வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்று கேட்டுள்ள பாலகிருஷ்ணன், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய விசாரணை நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.