திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வேறு யாரும் போட்டியிடாததால் திமுக தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநாடு போன்ற பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜாா்ஜ் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை திமுக பொதுக் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
பொதுக்குழுவில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்று உள்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.
அதேபோன்று, பொதுச் செயலாளராக அமைச்சா் துரைமுருகன், பொருளாளராக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு ஆகியோரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையுடம் படிக்க | இளம் வயது திருமணங்களா..? தீட்சிதர்களுக்குப் புது நெருக்கடி!
திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளராக ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்தார்.