
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபானம் அருந்திய இரண்டு பேர் திடீரென உயிரிழந்தனர்.
வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அடுத்துள்ள வீரசோழபுரத்தில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் வீரசோழபுரத்தைச் சேர்ந்த ரவி (57) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதே நிறுவனத்தில் மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய காலனியைச் சேர்ந்த சிவமுருகன் (53) என்பவர் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார்.
நண்பர்களான இவர்கள் இருவருக்கும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மிலாது நபியை முன்னிட்டு மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கள்ளச் சந்தையில் வாங்கிய இரண்டு மதுபான பாட்டில்களுடன் சம்பவத்தன்று இரவு இருவரும் நிறுவனத்துக்கு முன்பு அமர்ந்து, குளிர்பானம் கலந்து மதுபானம் அருந்தியுள்ளனர்.
அப்போது இருவருக்கும் தாங்க முடியாத வயிற்று எரிச்சல் ஏற்பட, ரவியின் மகன் பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் முத்தூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர்.
இதையும் படிக்க: கீவ் மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்: அச்சத்தில் மக்கள்
இறப்புக்கான காரணம் பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவரும். வெள்ளக்கோவில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.