உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் மீது ரஷியப் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியப் படைகள் கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி உக்ரைனின் பகுதிகளை ரஷியா கைப்பற்றி வருகின்றது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி ரஷியாவால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் சிலவற்றை மீட்டு வருகின்றது.
இந்நிலையில், ரஷியாவையும் அந்த நாட்டால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலம், சனிக்கிழமை நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் சேதமடைந்தது. இதனால், அந்தத் தீவுடன் ரஷியாவுக்கு இருந்த ஒரே சாலை வழி விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ்வில் மூன்று இடங்களில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை ரஷியப் படைகள் நடத்தியுள்ளது.
ரஷியப் படைகளின் ஏவுகணைத் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இருப்பினும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ரஷியாவின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து, கீவ் நகரில் உள்ள மக்கள் பதற்றத்துடன் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.