திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே இறந்தவரின் உடலை ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்துச் சென்று அடக்கம் செய்யும் அவல நிலை நீடித்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கனாம்பாளையம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டி அப்பகுதி மக்கள் பலமுறை கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையும் படிக்க | வாடகைத்தாய் மூலம் குழந்தைகள்: நயன்தாரா விதி மீறலா?
இந்த நிலையில் காக்கனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நேற்று உடல்நிலை பாதித்து உயிரிழந்ததன் காரணமாக அவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் காக்கனம்பாளையம் பகுதியில் இருந்து மிகவும் ஆபத்தான முறையில் பாம்பாற்றைக் கடந்து மறு கரையில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்த அவல நிலை ஏற்பட்டது.
மேலும் இந்தப் பகுதியில் மழைக்காலம் வந்தால் பாம்பாற்றைக் கடந்து சுடுகாட்டிற்கு செல்வதே மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் உடனடியாக பாலம் அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.