
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, கடந்த 2011-2015-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா்.
இதனடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பா்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோா் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினா் 3 வழக்குகளைப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், தன் மீதான மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி வி.சிவஞானம் விசாரித்தார்.
செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை, காவல்துறை என அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் புதிதாக மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.