ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்லத் திருமண நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,
“நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்வோம். அறிக்கையை பகிரங்கமாக பொதுவெளியில் வெளியிடுவோம். அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவிகிதத்தை நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள 30 சதவிகிதம் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றுவோம்.
மாநிலத்தின் நிதிநிலையை சரிசெய்து கொண்டு இருக்கிறோம். நிதிநிலை சரியான பிறகு விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்று பேசினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமியின் ஆணையம் கடந்த வாரம் இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தது குறிப்பிடத்தக்கது.