மேட்டுப்பாளையம்: கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் நோய்வாய்ப்பட்ட காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கும் வகையில் யானையின் இருப்பிடத்தை தீவிரமாக தேடி வருகின்றனர் வனத்துறையினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளது. குறிப்பாக அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் என்பது இப்பகுதிகளில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் ஆற்றில் தண்ணீர் குடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த விடியோவில் பதிவான காட்சிகளில் உடல் பலவீனத்துடன் காணப்படும் காட்டு யானை ஒன்று ஆற்றில் தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவது தெரிகிறது. இந்த நிலையில் இந்த காட்டு யானையினை பிடித்து சிகிச்சையளிக்கும் வகையில் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் யானை விரும்பி உண்ணும் பலாப்பழங்களில் மருந்துகளையும், தாது உப்புக்கட்டிகளையும் அதன் வழித்தடங்களில் வைத்தனர்.
ஆனால் மற்றொரு யானை அந்த பலாப்பழங்களை சாப்பிட்டுள்ளது. இதனையடுத்து காயம்பட்ட யானையை தேடும் பணியில் வனத்துறையினர் இன்றோடு 8-வது நாளாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.