கன்னியாகுமரியிலிருந்து இரண்டாவது நாள் நடைப்பயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை (பாரத் ஜோடோ யாத்) நேற்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று அகத்தீஸ்வரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பயணக் குழுவினர் தங்கினர்.
இதையடுத்து இன்று காலை அகத்தீஸ்வரம் கல்லூரியில் இருந்து நாகர்கோவில் நோக்கிய நடைப்பயணத்தை ராகுல் காந்தி தலைமையிலான குழுவினர் தொடங்கியுள்ளனர்.
ராகுல் காந்தியுடன் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் நடைப்பயணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
பயணத்திட்டம்
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீா் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,600 கி.மீட்டரை 148 நாள்கள் காங்கிரஸ் குழுவினர் பயணம் செய்கின்றனர்.
தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைப்பயணம். பிறகு மதிய உணவு இடைவேளை. பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைப்பயணம். இரவு ஓய்வு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப். 10 வரை மொத்தம் 56 கி.மீ., கேரளத்தில் 17 நாள்கள், கா்நாடகத்தில் 21 நாள்கள், தெலங்கானாவில் 13 நாள்கள், ஆந்திரத்தில் 3 நாள்கள் என தென்மாநிலங்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.